சட்டசபைக்குள் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் - தி.மு.க. எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை

சட்டசபைக்குள் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் (தி.மு.க.) ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.

அவர், சட்டசபையில் அதிகாரிகளுக்கென்று தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சட்டசபையில் இருந்தபடி யாரும் பேசக்கூடாது. அதற்கான சட்டசபை விதிகள் உள்ளன.

ஆனால் சில எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், அவர்களிடம் பேசுகின்றனர். அவர்களிடம் பேச வேண்டும் என்றால், அவையை விட்டு வெளியே சென்று அதிகாரிகள் அமர்ந்துள்ள இடத்தின் பின்னால் சென்று பேசலாம் என்று குறிப்பிட்டார்.

அதை தொடர்ந்து சபாநாயகர் தனபால், எம்.எல்.ஏ.க்கள் இனி அதையே கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com