ஊரடங்கு உத்தரவை மீறி கர்ப்பிணியை சரியான நேரத்தில் அழைத்து சென்று காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்

அசாமில் ஊரடங்கு உத்தரவை மீறி கர்ப்பிணியை அழைத்து சென்று சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து ஆட்டோ ஓட்டுனர் காப்பாற்றி உள்ளார்.
Published on

ஹைலகாண்டி,

அசாமில் ஹைலகாண்டி மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே வகுப்புவாத மோதல் ஏற்பட்டது. இதில் 15 வாகனங்கள் சேதமடைந்தன. 12 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். இதனை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த பகுதியில் வசித்து வரும் தம்பதி ரூபன் தாஸ் மற்றும் அவரது மனைவி நந்திதா. கர்ப்பிணியான நந்திதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தேவைப்பட்டு உள்ளது. இதனால் அவரது கணவர் தனக்கு தெரிந்தவர்களிடம் உதவிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அங்கு வருவதற்கு யாரும் முன்வரவில்லை. நந்திதாவின் பிரசவ வலி அதிகரித்து வந்தது. இந்நிலையில், அவரது வீட்டுக்கு அருகே வசித்து வந்த ரூபனின் நண்பரான ஆட்டோ ஓட்டுனர் மக்பூல் உடனடியாக உதவிக்கு முன்வந்துள்ளார். யாருமில்லாத சாலைகளில் வேகமுடன் ஆட்டோ ஓட்டி சென்றார். செல்லும் வழியில் இறைவனிடம் வேண்டியபடி சென்றுள்ளார்.

அவர் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு தம்பதியை அழைத்து சென்று சேர்த்து விட்டார். அந்த தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. வகுப்புவாத மோதலால் ஏற்பட்ட ஊரடங்கு உத்தரவுக்கு இடையே பிறந்த அந்த குழந்தைக்கு சாந்தி என பெயரிட்டுள்ளனர்.

இதுபற்றி அறிந்த ஹைலகாண்டி துணை ஆணையர் கீர்த்தி ஜல்லி மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு மோனீஷ் ஆகியோர் தம்பதியின் வீட்டிற்கு சென்று இதுபோன்று இந்து மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். தனது நண்பருக்கு துன்பம் நிறைந்த சூழலில் உதவிய ஆட்டோ ஓட்டுனர் மக்பூலையும் கீர்த்தி பாராட்டினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com