சென்னை,
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு தமிழக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதுபற்றி கவர்னர் பன்வாரிலால் புரோகித் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருந்து வருகிறார்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அமைச்சரவை எங்களை முன்கூட்டியே விடுவிக்க பரிந்துரை செய்த மறுகணமே, அதனை கவர்னர் அரசியலமைப்பு சட்டரீதியாக ஏற்றுக்கொண்டு, எங்களை விடுவிக்க உத்தரவிட்டு இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்காத சூழலில், நாங்கள் சிறைக்குள் சட்டவிரோத காவலில் உள்ளதாகவே கருத வேண்டும். எனவே சட்டவிரோதமாக சிறைக்குள் உள்ள என்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்தனர். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபாலன், தமிழக அரசு சார்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன், மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று பிறப்பித்தனர். அதில், நளினி, முருகன் உள்பட 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. சட்டரீதியாக சிறைக்குள் இருக்கும் இவர், சட்டத்துக்கு புறம்பாக சிறைக்குள் இருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது.
நளினி உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க தமிழக அமைச்சரவை இயற்றிய தீர்மானத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே, அது சட்டரீதியாக செல்லும். அமைச்சரவையின் பரிந்துரையை காரணம் காட்டி தன்னை விடுவிக்க வேண்டும் என்று மனுதாரர் கேட்க முடியாது. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.