ஆலங்குளம்,
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழகரும்புளியூத்தை சேர்ந்தவர் சுப்பையா (வயது 69) காய்கறி வியாபாரி. நேற்று அதிகாலை சுப்பையா தனது சைக்கிளில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு வியாபாரத்திற்கு சென்று கொண்டிருந்தார். கரும்புளியூத்து அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம், எதிர்பாராதவிதமாக சுப்பையா மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அந்த வாகனத்தில் சுப்பையாவின் சைக்கிள் சிக்கிக் கொண்டது. அதனை கவனிக்காத அந்த வாகனத்தின் டிரைவர், வாகனத்தை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சைக்கிள் ரோட்டில் உரசிக்கொண்டே தீப்பிடித்தவாறு சென்றுள்ளது.
அந்த பகுதியில் சென்றவர்கள் அந்த வாகனத்தில் இருந்தவரிடம் இதுகுறித்து கூறியதாக தெரிகிறது. உடனே டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு, கீழே இறங்கி சைக்கிளை எடுத்து ரோட்டின் ஓரத்தில் வீசிவிட்டு சென்று விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சுப்பையாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பையாவுக்கு, கருப்பம்மாள் என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.