அரக்கோணம் அருகே, தண்டவாளத்தில் விரிசல் கண்டுபிடிப்பு - எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை ரெயில்வே சிப்பந்திகள் கண்டுபிடித்து சரி செய்யப்பட்டது. இதனால் தாமதமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்பட்டு சென்றன.
Published on

அரக்கோணம்,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி செல்லும் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தின் வழியாக ரெயில்வே சிப்பந்திகள் நேற்று காலை வழக்கம்போல் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காலை 10 மணி அளவில் கைனூர் அருகே சென்றபோது தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அவர்கள் கண்டுபிடித்து அரக்கோணம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக ரெயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து வந்து விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே அந்த வழியாக வந்த பிலாஸ்பூர்-திருநெல்வேலி வாராந்திர எக்ஸ்பிரஸ், ஹவுரா-யஷ்வந்த்பூர் ரெயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் காலை 10.55 மணியளவில் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஒரு மணி நேர தாமதத்துக்கு பின்னர் ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com