கடலூர் முதுநகர் அருகே, தற்காலிக மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது

கடலூர் முதுநகர் அருகே உள்ள தற்காலிக மீன் மார்க்கெட்டில் நேற்று கூட்டம் அலைமோதியது.
Published on

கடலூர்,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் இயங்கி வந்த மீன் மார்க்கெட்டும், கடலூர் முதுநகரில் செயல்பட்டு வந்த மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டன.

இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டது.

அந்த வகையில் கடலூர் முதுநகர் அருகே உள்ள சிங்காரத்தோப்பு பாலத்தின் கீழ் பகுதியிலும் தற்காலிக மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு கடலூர் நகர மக்கள் சென்று மீன்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அவர்களது வலையில் சங்கரா, கவளை, மத்தி மீன்கள் அதிக அளவில் சிக்கியது.

இதை மீனவர்கள் தற்காலிக மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். கடந்த சில நாட்களாக மீன்கள் கிடைக்காமல் இருந்ததால், நேற்று மீன்கள் வாங்குவதற்காக சிங்காரத்தோப்பு பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தற்காலிக மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. விலை அதிகமாக இருந்தாலும் பொதுமக்கள் அதனை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com