

அழகியமண்டபம்,
இரணியல் அருகே கக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர் அந்த பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி அந்தபகுதியில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
ஸ்டீபன் தனது வீட்டின் ஒரு பகுதியில் பேக்கரிக்கு தேவையான பலகாரங்களை தயாரித்து வருகிறார். இங்கு 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். சம்பவத்தன்று ஸ்டீபனின் வீட்டில் பீரோவில் இருந்த 29 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு வேலை பார்த்து வரும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, ஒரு வேலைக்கார பெண் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண், ஸ்டீபனின் வீட்டில் ஆள் இல்லாதபோது நுழைந்து பீரோவில் இருந்து நகையை திருடியது தெரியவந்தது. மேலும், அந்த நகையை அருகில் உள்ள அடகுகடையில் விற்பனை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை அடகு கடைக்கு அழைத்து சென்று 21 பவுன் நகைகளை மீட்டனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.