ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

ஏரியூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
Published on

ஏரியூர்,

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது புதுநாகமரை கிராமம். இந்த கிராமத்தில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறப்படுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீருக்காக அருகில் உள்ள கிராமங்களுக்கு நடந்து சென்று பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வரவேண்டிய அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும் ஆத்திரம் அடைந்த புதுநாகமரை கிராமத்தை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று காலிக்குடங்களுடன் அப்பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com