எட்டயபுரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

எட்டயபுரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published on

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ நம்பிபுரத்தைச் சேர்ந்தவர் குருநாதன். ஓய்வுபெற்ற கிராம நிர்வாக உதவியாளர். இவருடைய மகன் சக்தி சிவா (வயது 33). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி. இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சக்தி சிவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி தன்னுடைய கணவரிடம் கோபித்து கொண்டு, தூத்துக்குடியில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் சக்தி சிவா மனமுடைந்த நிலையில் இருந்தார். மேலும் அவர் அடிக்கடி மது குடித்து வந்தார். இதையடுத்து சக்தி சிவாவை அவருடைய பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த சக்தி சிவா நேற்று காலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த சக்தி சிவாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமான 10 மாதங்களில் மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com