கடையநல்லூர் அருகே, கார் மரத்தில் மோதி கர்ப்பிணி பலி - 3 பேர் படுகாயம்

கடையநல்லூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில் கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
Published on

அச்சன்புதூர்,

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கல்யாணராமன் (வயது 36). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பாமா ருக்மணி (32). இவர்களது மகள் விஷாலிணி (4). பாமா ருக்மணி 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் வெங்கடாசலம், கல்யாணராமன், பாமா ருக்மணி, விஷாலினி ஆகிய 4 பேரும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, தங்களுக்கு சொந்தமான காரில் நேற்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

காரை கல்யாணராமன் ஓட்டினார். கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி தனியார் கல்லூரி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாமா ருக்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கல்யாணராமன், விஷாலிணி, வெங்கடாசலம் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சொக்கம்பட்டி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாமாருக்மணியின் உடலை பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கர்ப்பிணி பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com