கருப்பூர் அருகே அரசியல் கட்சி கொடி, பேனரை சேதப்படுத்திய மர்ம கும்பல்

கருப்பூர் அருகே அரசியல் கட்சி கொடி, பேனரை மர்ம கும்பல் சேதப்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருப்பூர் அருகே அரசியல் கட்சி கொடி, பேனரை சேதப்படுத்திய மர்ம கும்பல்
Published on

கருப்பூர்,

இதுபற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் கருப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கரும்பாலை பஸ்நிறுத்தத்தில் சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., காங்கிரஸ், த.மா.கா, உள்பட பல்வேறு கட்சிகளின் கொடி கம்பங்கள் நடப்பட்டு கொடியேற்றப்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பகுதியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கொடி கம்பத்தில் கொடியேற்றினார். அப்போது பேனரும் வைக்கப்பட்டு இருந்தது.

நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் இந்த பகுதிக்கு வந்து பா.ம.க. பேனரை சேதப்படுத்தினர். அருகில் உள்ள த.மா.கா. கொடி கம்பத்தையும் சேதப்படுத்தி, அதில் இருந்த கொடியை கிழித்து எறிந்தனர்.

நேற்று காலை இதை அறிந்ததும் பா.ம.க. நகர தலைவர் மகேந்திரன், நிர்வாகிகள் சக்திவேல், சதாசிவம் மற்றும் கட்சியினர் அங்கு திரண்டனர். இதேபோல் த.மா.கா. மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் ரகுநந்தகுமார், நகர தலைவர் அய்யண்ணன், முன்னாள் கவுன்சிலர் ரவி, நகர செயலாளர் வையாபுரி உள்ளிட்ட அந்த கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, இங்கு இரண்டாவது முறையாக கட்சிகளின் கொடியையும், பேனரையும் மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றனர்.

அப்போது போலீசார், மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதையடுத்து இரண்டு கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com