விழுப்புரம்,
புதுச்சேரி மாநிலம் நல்லவாடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 34). மீனவர். இவருடைய மகள் ஜெனஸ்ரீ(3). கடந்த 20-ந் தேதி ஏழுமலை தனது குடும்பத்துடன், கோட்டக்குப்பம் அருகே உள்ள அனிச்சங்குப்பத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு குழந்தை ஜெனஸ்ரீ விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அங்கு குப்பையில் கிடந்த, எலி பேஸ்ட்டை(விஷம்) எடுத்து குழந்தை ஜெனஸ்ரீ தின்றது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த குழந்தையின் வாயில் இருந்து நுரை தள்ளியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஏழுமலை மற்றும் உறவினர்கள், உடனடியாக குழந்தை ஜெனஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ஜெனஸ்ரீ பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.