மாமல்லபுரம் அருகே கரை ஒதுங்கும் தாது மணல் குவியல் மீன்கள் கிடைக்காமல் மீனவர்கள் ஏமாற்றம்

மாமல்லபுரம் அருகே தாது மணல் கரை ஒதுங்குகிறது. இதனால் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
Published on

மாமல்லபுரம்,

மாமல்லபுரம் அடுத்த வெண்புருஷம், கொக்கிலமேடு கடற்கரை பகுதியில் நீரோட்டத்தோடு அடித்து வரப்பட்ட தாது மணல் குவியல், கடற்கரை பகுதி முழுவதும் படிந்து, கறுப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. சாதாரண மணல் மேடு பகுதி கடலில் அடித்து செல்லப்பட்டு, தற்போது கொக்கிலமேடு முதல் வெண்புருஷம் கடற்கரை பகுதி வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு தாது மணல் குவியலே கரைப்பகுதியில் நிரம்பி காணப்படுகிறது.

இது குறித்து வெண்புருஷம், கொக்கிலமேடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் கூறியதாவது:-

பவுர்ணமி, அமாவாசை காலங்களில் கடலின் தன்மை மாறும்போது சில நேரங்களில் அலைகளில் அடித்து வரப்பட்ட தாது மணல் கரைப்பகுதியில் தேங்கி நிற்கும். மே, ஜூன் மாதத்தில் மலைகள், பாறைகள், சமவெளிகளை கடந்து கடலில் தாது மணல் அடித்து வரப்படும்போது கடலின் நிறமும் கறுப்பு நிறமாக மாறிவிடும். கடல் சீற்றம் அதிகம் ஏற்படும்போது தாது மணல் அலையில் அடித்து வரப்பட்டு மற்ற மணலுடன் கரைப்பகுதியில் தேங்கி நிற்கும்.

நீரோட்டத்துடன் தாது மணல் அடித்து வரப்படும் காலங்களில் மீன்களின் இனபெருக்கத்தையும் அதிகம் காண முடியாது. தற்போது மீன்பிடி தடைகாலம் முடிந்து கடலுக்குள் செல்லும் மீனவர்கள், நீரோட்டத்துடன் தாது மணல் அடித்து வரும் காரணங்களால் தாங்கள் வீசும் வலைகளில் போதிய அளவு மீன்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வெறும் படகுடன் திரும்புகின்றனர். அவ்வாறு சிக்கினாலும் சிறிய வகை மீன்களே அகப்படுகின்றன.

ஒரு புறம் கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் இதுபோன்ற தட்ப வெப்ப சூழ்நிலைகளால் மீன் வளம் இல்லாமல் போய் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com