மானூர் அருகே பயங்கரம்: பெண் சரமாரி வெட்டிக்கொலை கொத்தனாருக்கு வலைவீச்சு

மானூர் அருகே பெண்ணை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கொத்தனாரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

மானூர்,

நெல்லை மாவட்டம் மானூர் அருகே கானார்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ். விவசாயி. இவருடைய மனைவி அந்தோணியம்மாள் (வயது 45). இவர்களுடைய மகன் வடிவேல்குமார் (25).

இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் மரியாள் மகன் பேபி என்ற அந்தோணிராஜ். இவரும், வடிவேல்குமாரும் கொத்தனார்களாக வேலை செய்து வருகின்றனர். மரியாளும், அந்தோணியம்மாளும் அக்காள்-தங்கை ஆவர்.

இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக அந்தோணிராஜ், மானூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவில் இரு குடும்பத்தினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்தோணிராஜ் அரிவாளுடன் வடிவேல்குமாரை தேடி, அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த வடிவேல்குமாரின் தாயார் அந்தோணியம்மாளிடம் அந்தோணிராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ் தனது சித்தி என்றும் பாராமல், அரிவாளால் அந்தோணியம்மாளை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அந்தோணியம்மாள் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்தோணிராஜ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா, மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாடசாமி, கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட அந்தோணியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அந்தோணிராஜை வலைவீசி தேடி வருகின்றனர். மானூர் அருகே குடும்ப பிரச்சினையில் கொத்தனார் தனது சித்தியையே அரிவாளால் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com