கடமலைக்குண்டு,
தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே சிறப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 60). கூலித்தொழிலாளி. நேற்று காலை அந்த பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கொட்டைமுந்திரி தோட்டத்துக்கு கணேசன் சென்றார். அங்கு கால்நடைகளின் தீவனத்துக்கு மரங்களில் இருந்து இலைகளை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அந்த தோட்டத்துக்குள் கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடியை பார்த்த கணேசன் அதிர்ச்சி அடைந்தார். உடனே கரடியிடம் சிக்காமல் இருக்க தப்பித்து அவர் ஓடினார். ஆனால் கணேசனை கரடி விரட்டி சென்று தாக்கியது. அவருடைய அலறல் சத்தம் கேட்டு, அருகே உள்ள தோட்டத்தில் இருந்த விவசாயிகள் ஓடி வந்தனர். பின்னர் அவர்கள் தோட்டத்தில் இருந்த கரடியை விரட்டினர். காயமடைந்த கணேசனை அவர்கள் மீட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கண்டமனூர் வனச்சரகர் குமரேசன் மற்றும் வனத்துறையினர் அங்கு விரைந்து வந்தனர். காயமடைந்த கணேசனை மீட்டு சிகிச்சைக்காக கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கணேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.