நாமகிரிப்பேட்டை அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை சப்-கலெக்டர் விசாரணை

நாமகிரிப்பேட்டை அருகே, திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சப்-கலெக்டர் கிராந்தி குமார் விசாரணை நடத்தினார்.
Published on

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள கப்பலூத்து கிராமம் விளாங்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் வீரவேல் (வயது 30). இவர் சொட்டுநீர் பாசனம் அமைத்து தரும் வேலை பார்த்து வருகிறார். விளாங்குட்டை அருகேயுள்ள ஒன்பதாம் பாலிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (49). இவரது மகள் கார்த்திகா (21).

கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வீரவேல்-கார்த்திகா திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் இருவருக்கும் ஏழரை சனி திசை நடந்து வருவதால் தனித்தனியாக வசிக்கும்படி ஜோதிடர் கூறியதாக கூறப்படுகிறது.

இதையொட்டி கார்த்திகா தனிக்குடித்தனம் போகலாம் என கணவரிடம் கூறியுள்ளார். அதற்கு அவரது கணவர் வீரவேல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனம் உடைந்த கார்த்திகா கணவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி கார்த்திகாவின் தந்தை முருகேசன் ஆயில்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்திகாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திகாவின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.

இதற்கிடையில் திருமணமாகி 2 மாதத்தில் கார்த்திகா இறந்ததையொட்டி, நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார் விசாரணை நடத்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com