நாங்குநேரி அருகே பயங்கரம் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொத்தனார் கொடூரக்கொலை 16 வயது மகன் கைது

நாங்குநேரி அருகே, கயிற்றால் கழுத்தை இறுக்கி கொத்தனார் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய 16 வயது மகனை போலீசார் கைது செய்தனர்.
Published on

இட்டமொழி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமம் கக்கன் தெருவை சேர்ந்தவர் மாடசாமி (வயது 44). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். அவருடைய மனைவி செல்வி (40). இவர்களுக்கு ஒரு மகளும், 16 வயது மகனும் உள்ளனர்.

மாடசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. மேலும் அவர் சரிவர வேலைக்கும் செல்லாமல், மது அருந்த பணம் கேட்டு மனைவியை தொந்தரவு செய்து வந்துள்ளார். ஊரில் கோவில் விழாக்கள் மற்றும் வீட்டில் பண்டிகை நாட்கள் வந்தால் மாடசாமி வீட்டிலேயே வைத்து மது அருந்திவிட்டு, மனைவி மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாடசாமி வேலைக்கு செல்லவில்லை. இரவில் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் அனைவரையும் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். மனைவி வேலைக்கு சென்றுவிட்டதால் மாடசாமிக்கும், அவருடைய 16 வயது மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த மகன், கயிற்றால் கழுத்தை இறுக்கி மாடசாமியை கொலை செய்தாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அவன் தப்பிச் சென்றுவிட்டான். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், மாடசாமி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில், நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார், நாங்குநேரி துணை சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பின்னர் மாடசாமி உடல், பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாடசாமியின் மகனை பிடித்து கைது செய்தனர். தந்தையின் கழுத்தை கயிற்றால் இறுக்கி மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com