நெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவர் கைது ரூ.1.52 லட்சம் பறிமுதல்

நெல்லை அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற முதியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.1.52 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

மானூர்,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை அருகே உள்ள சேதுராயன்புதூர் விலக்கு பகுதியில் மானூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒருவர் மொபட்டில் வேகமாக வந்தார். உடனே அவரை போலீசார் நிறுத்தினர். ஆனால் அவர் நிற்காமல் வேகமாக சென்று விட்டார். உடனே போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்து, மொபட்டை சோதனை செய்தனர்.

அப்போது அதில் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மானூர் அருகே உள்ள கம்மாளங்குளத்தை சேர்ந்த செல்லசாமி (வயது 66) என்பதும், அவர் அந்த பணத்தை அ.தி.மு.க. சார்பில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. உடனே போலீசார் செல்லசாமியை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி கோவில் பிள்ளை தலைமையில், போலீசார் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி நிர்வாகி பொன்னுத்தாய் 5 பக்கம் பெயர் கொண்ட ஒரு பட்டியலுடன் டோக்கன் வைத்து நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொன்னுத்தாயிடம் ரூ.23 ஆயிரத்து 200 இருந்தது. அதனை வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அவர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. உடனே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார், பொன்னுத்தாய் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com