நெய்வேலி அருகே, வேன் மோதி 1½ வயது குழந்தை பலி

நெய்வேலி அருகே வேன் மோதி 1½ வயது குழந்தை பலியானது.
நெய்வேலி அருகே, வேன் மோதி 1½ வயது குழந்தை பலி
Published on

நெய்வேலி,

நெய்வேலி அருகே உள்ள பொன்னங்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்(வயது 35). இவருடைய மனைவி உமா. இவர்களுடைய மகன்கள் தினகரன்(4), பொன்மொழிசெல்வன்(1). இதில் தினகரன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறான். இதற்காக அவன் தினசரி பள்ளிக்கு வேனில் சென்று வந்தான்.

இந்த நிலையில் நேற்று காலையிலும் வழக்கம் போல் பள்ளிக்கு செல்வதற்காக வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தான். அவனுடன் குழந்தை பொன்மொழிசெல்வனும் விளையாடியது. பின்னர் அங்கு வந்த வேனில் தினகரன் ஏறினான். அப்போது குழந்தை பொன்மொழிசெல்வன், வேனின் முன்புறம் வந்து நின்றது. இது பற்றி அறியாத டிரைவர் வேனை இயக்கினார். இதில் வேன் மோதியதில் குழந்தை பலத்த காயமடைந்தது.

இதைபார்த்த பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பொன்மொழிசெல்வன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

பின்னர் இதுபற்றி கமலக்கண்ணன் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com