பள்ளிகொண்டா அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 30 பவுன் நகைதிருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பள்ளிகொண்டா அருகே முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 30 பவுன் நகைகளை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Published on

அணைக்கட்டு,

பள்ளிகொண்டாவை அடுத்த திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 51) முன்னாள் ராணுவவீரர். சென்னையில் மனைவியுடன் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் சென்னையில் படித்து வருகின்றனர். இதனால் சவுந்தர்ராஜன் வாரத்திற்கு ஒருமுறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சவுந்தர்ராஜனின் மனைவி திப்பசமுத்திரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்துவிட்டு வெள்ளிக்கிழமை சென்னைக்கு திருப்பியதாக தெரிகிறது. மறுநாள் 6-ந் தேதி காலை சவுந்தர்ராஜன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கபப்ட்டிருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து அவருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சவுந்தர்ராஜன் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் சென்னையில் இருந்து வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 30 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சவுந்தர்ராஜன் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தினர். வேலூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் திருட்டு நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com