பூந்தமல்லி அருகே சிறுவன் ஓட்டிய கார் கடைக்குள் புகுந்தது வியாபாரியின் கால்கள் முறிவு

பூந்தமல்லி அருகே சிறுவன் ஓட்டி வந்த கார், இனிப்பு கடைக்குள் புகுந்தது. இதில் வியாபாரியின் 2 கால்களும் முறிந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
Published on

பூந்தமல்லி,

பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் இனிப்பு கடை நடத்தி வருபவர் பெரியசாமி (வயது 47). நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், பிரியாணி கடைக்கு சொந்தமான காரை ஓட்டி வந்தான்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், இனிப்பு கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை இடித்து தள்ளியபடி கடைக்குள் புகுந்தது. கடையின் முன்புறம் இனிப்புகள் வைக்கப்பட்டு இருந்த கண்ணாடி பெட்டியை கார் இடித்து தள்ளியதால் கண்ணாடிகள் நொறுங்கின.

மேலும் வியாபாரி பெரியசாமி, இந்த இடுபாடுக்குள் சிக்கி கூலிச்சட்டார். அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து கடைக்குள் புகுந்த காரை வெளியே எடுத்தனர். பின்னர் கடைக்குள் காயங்களுடன் இடிபாடுக்குள் சிக்கியிருந்த பெரியசாமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்திய பரிசோதனையில் கார் மோதியதில் அவரது 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். நல்லவேளையாக அப்போது பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com