புளியங்குடி அருகே பயங்கரம்: தொழிலாளி வெட்டிக்கொலை ஒருவர் கைது

புளியங்குடி அருகே தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
Published on

புளியங்குடி,

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேயுள்ள பச்சேரி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமையா (வயது 42). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோட்டூர்சாமி (42) என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அங்குள்ள டீக்கடையில் ராமையா டீக்குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கோட்டூர்சாமிக்கும், ராமையாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கோட்டூர்சாமி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமையாவின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த ராமையாவை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோட்டூர்சாமியை கைது செய்தனர். முன்விரோதத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com