ராமநத்தம் அருகே, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகை பறிப்பு - மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

ராமநத்தம் அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 6½ பவுன் நகையை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

ராமநத்தம்,

ராமநத்தம் அருகே கண்ட முத்தான் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி சிவரஞ்சனி. வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனி வழக்கம்போல் சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். அப்போது அவர் வீட்டு கதவை பூட்டாமல் சாத்திவிட்டு தூங்கியதாக தெரிகிறது. இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் சிவரஞ்சனியின் வீட்டு கதவை திறந்து உள்ளே புகுந்தார்.பின்னர் அவர் வீட்டில் இருந்த 2 கொலுசுகளை திருடினார். தாடர்ந்து அந்த மர்மநபர் அங்கு ஒரு அறையில் தூங்கிக்கொண்டிருந்த சிவரஞ்சனியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்தார். இதில் திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள், அந்த மர்மநபர் அங்கிருந்து வீட்டின் பின்புறத்தில் உள்ள மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல் வழியாக தப்பிச்சென்று விட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். வீட்டில் தூங்கிக்கொண்டிந்த பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com