ரிஷிவந்தியம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் சங்கர் (வயது 49). விவசாயி. இவருடைய அண்ணன் ஜெயபால். அதே ஊரைச்சேர்ந்தவர் இவர்களுடைய சித்தப்பா இளையராமர் (75). இந்த நிலையில் சங்கருக்கும், ஜெயபாலுக்கும் இடையே சொத்து பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஜெயபாலுக்கு ஆதரவாக இளையராமர் பேசி வந்துள்ளார். இதனால் இளையராமருக்கும், சங்கருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் ரிஷிவந்தியம் அருகே இளையனார்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இளையராமர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சங்கர் இளையராமரை மோட்டார் சைக்கிளில் அழைத் துக் கொண்டு அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்துக்கு சென்றார். அங்கு சங்கர், சொத்து பிரச்சினையில் ஏன் ஜெயபாலுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் என அவரிடம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சங்கர் அங்கு கிடந்த கட்டையை எடுத்து சரமாரியாக இளையராமரை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இளையராமர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் சங்கர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.