செங்கோட்டை அருகே லோடு ஆட்டோ மோதி அய்யப்ப பக்தர்கள் 2 பேர் சாவு கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

செங்கோட்டை அருகே லோடு ஆட்டோ மோதி அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
Published on

செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேட்டுதுரைச்சாமிபுரத்தை சேர்ந்தவர் சிவபண்டாரம் மனைவி நல்லமுத்து (வயது 65). இவரும், அவருடைய உறவினர்களான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள வடக்கு காரசேரியை சேர்ந்த பேச்சிமுத்து (27) உள்பட 15 பேர் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நேற்று முன்தினம் ஒரு வேனில் புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் அதே வேனில் தங்கள் ஊருக்கு புறப்பட்டனர்.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் செங்கோட்டை அருகே உள்ள கேசவபுரம் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேனில் இருந்தவர்கள் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என கூறினர். உடனே டிரைவர் கேசவபுரம் மெயின் ரோட்டின் ஓரத்தில் வேனை நிறுத்தினார். பின்னர் வேனில் இருந்தவர்கள் அனைவரும் கீழே இறங்கி இயற்கை உபாதையை கழித்தனர்.

நல்லமுத்துவும், பேச்சிமுத்துவும் ரோட்டை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக கேரளாவுக்கு காய்கறி ஏற்றி சென்ற லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். உடனே உறவினர்கள் அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் நல்லமுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

பேச்சிமுத்துவை மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்துவும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com