

சின்னசேலம்,
சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் விருத்தாசலம்-சேலம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அப்துல்அஜிஸ்(வயது 48). இவரது மனைவி அபிதாபேகம்(42). கணவன்-மனைவி இருவரும் அதேஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். அப்துல்அஜிஸ் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி சமயபுரத்தில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் அவர் நேற்று காலை 6.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஏ.டி.எம். கார்டு, இருசக்கர வாகன ஆர்.சி.புத்தகம் ஆகியவற்றை காணவில்லை.
இச்சம்பவம் குறித்து அப்துல்அஜிஸ் கீழ்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நகை, பணம் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டதோடு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கணவன், மனைவி இருவருமே ஆசிரியர் என்பதால் நகை, பணம் அதிகமாக வீட்டில் வைத்திருப்பார்கள் என்று மர்மநபர்கள் எண்ணியுள்ளனர். இதனால் அவர்கள் தம்பதியினர் குடும்பத்துடன் வெளியூர் செல்வதை நோட்டமிட்டு வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணம் மற்றும் ஏ.டி.எம்.கார்டு, ஆர்.சி.புத்தகத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. கணவன்-மனைவி இருவரும் தங்களது பெரும்பாலான நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததால் அந்த நகைகள் கொள்ளை போகாமல் தப்பின. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.