தியாகதுருகம் அருகே, மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதல்; கொத்தனார் பலி

தியாகதுருகம் அருகே தனது கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்றபோது வாகனம் மோதி கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.
Published on

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே வேளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மகன் ஜான்சன் அந்தோணிராஜ் (வயது 23). கொத்தனார். இவரது மனைவி ஆஷா. 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் ஆஷா உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். தனது மனைவியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ஜான்சன் அந்தோணிராஜ் மோட்டார் சைக்கிளில் எலவனாசூர்கோட்டைக்கு புறப்பட்டு சென்றார்.

தியாகதுருகம் அருகே பிரிதிவிமங்கலம் மேம்பாலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த ஜான்சன் அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த தகவலின் பேரில் தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்து குறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜான்சன்அந்தோணிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே விபத்து குறித்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், ஜான்சன்அந்தோணிராஜியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது குறித்த ஆஷா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேளாக்குறிச்சி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com