நீடாமங்கலம்,
நீடாமங்கலம் சந்தான ராமர் கோவிலில் ராமநவமி பிரம்மோற்சவம் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் சீதா, லெட்சுமணர், அனுமன், சந்தானராமருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, இரவு சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து நேற்று வெண்ணெய்த்தாழி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு நவநீதசேவையில் ராமர் வெண்ணெய்த்தாழி பல்லக்கில் எழுந்தருளி பக்தர் களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெண்ணெய் வழங்கி ராமபிரானை தரிசனம் செய்தனர்.
மாலையில் குதிரை வாகனத்தில் சந்தானராமர் ராஜஅலங்காரத்தில் எழுந்தருளினார். முன்னதாக சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.