

பெரம்பலூர்,
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நெல்லை கண்ணனின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதன் காரணத்தால் நேற்று மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இன்று பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் இருந்த போது நெல்லை கண்ணன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மீது பா.ஜ.க. அளித்த புகாரின் அடிப்படையில் 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.