நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளன - ஏ.பி.சிங்

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்றுள்ள குற்றவாளிகளுக்கு இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளதாக அவர்களது வக்கீல் ஏ.பி.சிங் கூறியுள்ளார்.
Published on

புதுடெல்லி,

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 4 பேருக்கு வரும் 16 ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்பட்ட நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், சுப்ரீம் கோர்ட்டில் தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது வரும் டிசம்பர் 17 ஆம் தேதி மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. இதனால், தூக்கு தண்டனை மேலும் தள்ளிப்போகிறது.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயாவின் தாயார் சுப்ரீம் கோர்டில் முறையீடு செய்தார். இது குறித்து குற்றவாளிகள் தரப்பு வக்கீல் ஏ.பி.சிங் பேசிய போது, இது சட்டத்தை தவறாக பயன்படுத்தும் முறை என்றார்.

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், சட்டத்தை நாம் மதிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு இன்னும் சட்டரீதியான வாய்ப்புகள் இருக்கின்றன. தீவிரவாதிகளுக்கு கூட சட்டரீதியான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது இவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறு இல்லை. இது அவர்களது முதல் குற்றம் தான். சட்டரீதியான விசாரணை நடைபெற வேண்டும் என்றார்.

இவர்களுக்கு தண்டனை வழங்குவதால் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்து விடுமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர்கள் நால்வரும் தங்களை முன்னேற்றிக் கொள்ள முயற்சி செய்து வருவதாகவும், சிறையில் அவர்கள் வரைந்த ஓவியங்கள் பல லட்சங்களுக்கு விற்பனை ஆனதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com