ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.78 லட்சம் கையாடல்; 2 பேர் கைது

திண்டிவனம் பகுதியில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பாமல் ரூ.78 லட்சத்தை கையாடல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் முத்துப்பிள்ளைபாளையம் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் (வயது 42). இவர் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம். எந்திரங்களுக்கு பணம் நிரப்பக்கூடிய நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இதே நிறுவனத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா தென்நெற்குணம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் காளிங்கன் (28), அதே கிராம பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த புருஷோத்தமன் மகன் பிரசாந்த் (28) ஆகிய இருவரும் ஊழியர்களாக வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் திண்டிவனம் பகுதியில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்குரிய 4 ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணி ஒதுக்கப்பட்டு அவர்கள் அப்பணியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காளிங்கன் கடந்த சில மாதமாக பணிக்கு வராமல் இருந்துள்ளார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்நிறுவன அதிகாரிகள் திண்டிவனம் வந்து ஏ.டி.எம். எந்திரங்களின் பண இருப்பை தணிக்கை செய்தனர். அப்போது ரூ.78 லட்சத்து 21 ஆயிரம் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் காளிங்கனும், பிரசாந்தும் சேர்ந்தும் ஏ.டி.எம். எந்திரங்களில் பணத்தை நிரப்பாமல் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நிறுவன அதிகாரி அபிஜித் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், பரணிநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததோடு இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று திண்டிவனம் பகுதியில் இருந்து வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற காளிங்கன், பிரசாந்த் ஆகிய இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com