ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் மேற்கு வங்காள வியாபாரிக்கு கத்திக்குத்து - வாலிபர் கைது

ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்தில் மேற்கு வங்காள வியாபாரிக்கு கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
Published on

ஒட்டன்சத்திரம்,

மேற்கு வங்காள மாநிலம் கண்ணப்பிரான் காசிப்பூரை சேர்ந்தவர் ராபின்தாஸ் (வயது 42). இவர் ராசிக்கல் மோதிரம் விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் திண்டுக்கல்லில் உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்று ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் ராபின்தாஸ் மோதிரம் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த தர்வீஸ் மைதீன் (30) என்பவர் மோதிரங்களை வாங்கியதாக தெரிகிறது. அதற்கு ராபின்தாஸ் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுத்து கத்தியால் ராபின்தாசை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையத்தில் நின்றவர்கள் தர்வீஸ் மைதீனை பிடித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com