

வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அடுத்த காட்டாங்கொளத்தூர் திருப்பனந்த ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45), ரெயில்வே ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காஞ்சனா (40). இருவரும் நேற்று மாலை செங்கல்பட்டில் இருந்து காட்டாங்கொளத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சேகரும், காஞ்சனாவும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேதபரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகிறார்கள்.