திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் 5-ந் தேதி நடக்கிறது

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடக்கிறது.
Published on

ஸ்ரீரங்கம்,

பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 14-ந் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 21-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பங்குனி தேரோட்டம் வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி, பிரியாவிடை ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.15 மணியளவில் கொடிமரம் அருகே வந்தனர்.

அங்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்தனர். அப்போது மூன்றாம் பிரகாரத்தில் உள்ள எட்டுத்திக்கு கொடிமரங்களிலும் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது கோவில் யானை அகிலா கொடிமரங்களுக்கு மரியாதை செலுத்தியது. இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் 2-ம் நாளான இன்று (திங்கட்கிழமை) இரவு சுவாமி சூரியபிரபை வாகனத்திலும், அம்மன் சந்திரபிரபை வாகனத்திலும், நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு பூத வாகனம், காமதேனு வாகனத்திலும், 3-ந் தேதி கைலாச வாகனம், கிளி வாகனத்திலும், 4-ந் தேதி சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தெருவடைச்சானுடன் வீதி உலா வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் 5-ந்தேதி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்திலும், 7-ந்தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 8-ந்தேதி அதிகார நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும், 9-ந்தேதி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். பங்குனி தேர்த்திருவிழா 9-ந் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனை தொடர்ந்து சொக்கர் உற்சவம், மவுனோத்ஸவம், சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெறுகிறது. 19-ந் தேதி பஞ்சப்பிரகார விழா நடைபெறுகிறது. அதையொட்டி சுவாமி அம்மன் வேடத்திலும், அம்மன் சுவாமி வேடத்திலும் வெள்ளி மஞ்சத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தில் வீதி உலா வருகின்றனர்.

21-ந் தேதியுடன் பங்குனி மண்டல பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா, தக்கார் ராணி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com