மோட்டார் சைக்கிள் மீது தனியார் மில் ஜீப் மோதல்: விவசாயிகள் 2 பேர் பலி

குஜிலியம்பாறை அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் மில் ஜீப் மோதிய விபத்தில் விவசாயிகள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
Published on

குஜிலியம்பாறை,

குஜிலியம்பாறை அருகே உள்ள திருமக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (வயது 60), மணிவேல் (44). விவசாயிகள். இவர்கள் தங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் விவசாயம் செய்து வந்தனர். கோட்டாநத்தம் குமரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (45). இவர், பாளையம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். இவருக்கும், குமரன்பட்டியில் சொந்தமாக விவசாய தோட்டம் உள்ளது.

இவர்கள் 3 பேரும் தங்களது தோட்டங்களில் விளையும் காய்கறிகளை, மினி வேன்கள் மூலம் கரூர் உழவர் சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு, தங்களது தோட்டங்களில் விளைந்த தக்காளியை மினிவேன் மூலம் கரூர் உழவர் சந்தைக்கு கொண்டு சென்றனர். வேனை பின்தொடர்ந்து அவர்கள் மோட்டார் சைக்கிளில் கரூர் சென்றனர்.

பின்னர் உழவர் சந்தையில் தக்காளியை இறக்கி விட்டு, ஒரே மோட்டார் சைக்கிளில் அவர்கள் 3 பேரும் நேற்று காலை திருமக்கம்பட்டி நோக்கி வந்தனர். மோட்டார் சைக்கிளை பழனிச்சாமி ஓட்டினார். கரூர்-திண்டுக்கல் மெயின்ரோட்டில் குஜிலியம்பாறையை அடுத்த தி.கூடலூர் பூபாலம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

அப்போது கரூர் நோக்கி எதிரே சென்ற தனியார் மில் ஜீப், மோட்டார் சைக்கிள் மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பழனிச்சாமி, மணிவேல் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயத்துடன் முருகேசன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த குஜிலியம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக எரியோட்டை சேர்ந்த தனியார் மில் ஜீப் டிரைவர் கனகராஜ் (52) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com