பாடாலூர்,
பாடாலூர் அருகே விஜயாபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி காப்புகட்டி விரதமிருந்த பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் சுமந்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்னர் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்ட பின், பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தும், மாவிளக்கு செய்தும் வழிபட்டனர். இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.