பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய நபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து திருட்டு போன 31 பவுன் நகைகளை மீட்டனர்.
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கலியனூர் பாரதி நகரை சேர்ந்தவர் அருண். இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் 14 பவுன் நகைகளை திருடி சென்றார்.

இதேபோல் குமாரபாளையம்- பள்ளிபாளையம் ரோடு அமிர்தா நகரில் செல்வராஜ் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து ஏப்ரல் மாதம் 9-ந் தேதி 6 பவுன் நகைகளையும், குமாரபாளையம் கத்தேரி பிரிவு சண்முகம் என்பவர் வீட்டில் மே மாதம் 6-ந் தேதி பூட்டை உடைத்து 5 பவுன் நகைகளையும், எலச்சிபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பருத்திபள்ளி மேட்டுநாயக்கன் தெரு, கோவிந்தன் என்பவரது வீட்டில் ஜூலை மாதம் 5-ந் தேதி பூட்டை உடைத்து சுமார் 5 பவுன் நகைகளையும் மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார்.

இது தொடர்பாக பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைத்து, போலீசார் நகைகளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பள்ளிபாளையம் சின்னார்பாளையம் வாய்க்கால்மேடு பஸ்நிறுத்தம் அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஆச்சம்பட்டி ரத்னகுமார் (வயது32) என்பதும், பள்ளிபாளையத்தில் அருண், குமாரபாளையத்தில் செல்வராஜ், சண்முகம் மற்றும் பருத்திபள்ளியில் கோவிந்தன் ஆகியோர் வீட்டில் திருடி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த தனிப்படை போலீசார், அவர் கொடுத்த தகவலின் பேரில் திருட்டு போன 31 பவுன் நகைகளை மீட்டனர்.

இந்த வழக்குகளில் துரிதமாக விசாரணை நடத்தி, வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய நபரை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com