வில்லிவாக்கத்தில் வாலிபர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 6 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வில்லிவாக்கத்தில் வாலிபரை ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த 6 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published on

செங்குன்றம்,

சென்னை வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் அஸ்ரப். இவருடைய மகன் ஷாஜகான் (வயது 23). நேற்று காலை இவர், வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. உடனே ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, கை, கால்களில் பலத்த வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த ஷாஜகான், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அண்ணா நகர் போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி, வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டீன் பால்சுதாகர், இன்ஸ்பெக்டர் ரிஜிஸ் பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான ஷாஜகான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷாஜகான் தனது நண்பர்களான பிரபு உள்ளிட்டோருடன் கிரிக்கெட் விளையாடினார். அப்போது வில்லிவாக்கத்தை சேர்ந்த சண்முகம், அஜித், திவாகர் ஆகியோருக்கும், ஷாஜகான் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இது சம்பந்தமாக போலீசார் இருதரப்பினரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட இந்த முன்விரோதம் காரணமாக எதிர் கோஷ்டியினர் ஷாஜகானை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலை நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com