பாளையங்கோட்டை அருகே பரிதாபம் எறும்பு பொடி சாப்பிட்ட ஒரு வயது குழந்தை சாவு

பாளையங்கோட்டை அருகே எறும்பு பொடி சாப்பிட்ட ஒரு வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
Published on

நெல்லை,

பாளையங்கோட்டை அருகே உள்ள எல்.ஜி.நகரை சேர்ந்தவர் மிக்கேல். இவருடைய மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள். அதில் இளைய மகள் அனலியா பிரகாசினி (வயது 1). மாரியம்மாள் தனது வீட்டில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டுக்கு எறும்பு வராமல் இருக்க அதை சுற்றிலும் எறும்பு பொடியை தூவி வைத்து உள்ளார். நேற்று காலையில் மாரியம்மாள் குழந்தை அனலியா பிரகாசினியை வீட்டில் விளையாட விட்டு விட்டு வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார்.

அப்போது குழந்தை அங்கு கிடந்த எறும்பு பொடியை எடுத்து சாப்பிட்டு கொண்டு இருந்தது. இதை பார்த்த மாரியம்மாள் குழந்தையை தூக்கி, எறும்பு பொடியை அகற்றினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சையாக சோப்பு நுரையை கரைத்து கொடுத்துவிட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை அனலியா பிரகாசினி பரிதாபமாக இறந்தாள்.

இறந்த குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com