எனது நோக்கம், இந்தியாவை முன்னோக்கி அழைத்து செல்வதுதான் - பிரதமர் மோடி

எனக்கு பினாமி சொத்து இருப்பதை நிரூபிக்க முடியுமா? என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சவால் விடுத்துள்ளார்.
Published on

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பால்லியாவில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், நாட்டு மக்களை கொள்ளையடித்து பிரதமர் ஆக வேண்டும் என்று நான் ஒருபோதும் கனவு கண்டது இல்லை. நான் இளமைப்பருவத்தில் ஏழையாக இருந்தபோது அனுபவித்திராத எல்லா வசதிகளையும் வழங்குவதற்கு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யத்தான் விரும்புகிறேன். நான் எதிர்க்கட்சிகளுக்கு சவால் விடுக்கிறேன்.

எனக்கு பினாமி சொத்து உள்ளது என்றோ, பண்ணை வீடு உள்ளது என்றோ, வெளிநாட்டு வங்கிகளில் பணம் குவித்துள்ளேன் என்றோ, வணிக வளாகம் உள்ளது என்றோ, வெளிநாடுகளில் என் பெயரில் சொத்து உள்ளது என்றோ, சொகுசு கார் உள்ளது என்றோ நிரூபிக்க முடியுமா? நான் பணக்காரன் ஆக வேண்டும் என்று ஒருபோதும் கனவு கண்டது இல்லை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்களாக்கள் கட்டி உள்ளனர்.

மற்ற சொத்துக்களை குவித்து உள்ளனர். தங்களது உறவினர்களை சொத்துக்கள் குவிக்க வைத்து உள்ளனர். என்னிடம் உள்ள ஒரே சாதி வறுமைதான். எனவேதான் நான் வறுமைக்கு எதிராக கிளர்ச்சி நடத்தி இருக்கிறேன்.

நான் எத்தனையோ தேர்தல்களில் போட்டியிட்டு இருக்கிறேன். ஆனால் என் சாதியின் ஆதரவை கேட்டுப் பெற்றதில்லை. எனது நோக்கம், இந்தியாவை முன்னோக்கி அழைத்துச்செல்வதுதான் என்று கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com