70 ஆண்டுகளில் செய்ய முடியாத சாதனையை ஒரே ஆண்டில் நிகழ்த்தியவர், பிரதமர் மோடி துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

70 ஆண்டுகள் செய்ய முடியாத சாதனையை பிரதமர் மோடி ஒரே ஆண்டில் நிகழ்த்தியுள்ளார் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
Published on

பெங்களூரு,

துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராண் ராமநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவி ஏற்று ஓராண்டு நிறைவடைந்து உள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடந்த 70 ஆண்டுகளில் செய்யாத பணிகளை, சாதனையை மோடி கடந்த ஓராண்டில் நிகழ்த்தியுள்ளார். மோடி ஆட்சியின் முதல் 5 ஆண்டுகளில் ஜன்தன் வங்கி கணக்கு, காப்பீடு, ஓய்வூதியம், ஆயுஸ்மான், இந்தியாவில் தயாரிப்போம், மலிவு விலை மருந்து கடைகள், பண மதிப்பிழப்பு உள்ளிட்ட முக்கியமான திட்டங்களை அமல்படுத்தினார்.

30 கோடி மக்களை புதிதாக வங்கி வளையத்திற்குள் கொண்டு வந்த பெருமை மோடியை சேரும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தார், முஸ்லிம் பெண்கள் பாதிப்பதை தடுக்க முத்தலாக் முறையை ஒழித்தார். ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கடினமான முடிவு மூலம் தடுத்துள்ளார். அவரது இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பாராட்டியுள்ளன.

உடல் கவச உடைகள், என்.95 முகக்கவசங்கள், செயற்கை சுவாச கருவிகள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளது. பிற நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சியை சீராக்க ரூ.20 லட்சம் கோடி தொகுப்பை மோடி அறிவித்துள்ளார். இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com