

சென்னை,
தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என்று மதில்மேல் பூனையாக இருந்த தேமுதிக, கடைசியில் இன்று தி.மு.க. கூட்டணியை உறுதி செய்துள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தார். இதனால், நீண்ட நாள் அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க. சார்பில் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி தி.மு.க.வை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தே.மு.தி.க.-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது தி.மு.க. அத்தகைய மக்கள் விரோத தி.மு.க.வுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.