எனக்கு கோவை வேறு, கரூர் வேறு இல்லை: செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை கமல்ஹாசன் போட்டியிட்டார்.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
Published on

கோவை,

தமிழக சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார். இதனால் கோவை தெற்கு தொகுதி வி.ஐ.பி. அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த தொகுதியில் கடந்த முறை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை காந்திபுரத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவரிடம், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்று நிருபர்கள் கேட்டபோது, ‘தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. இதனால் கரூரில் போட்டியிட்ட எனக்கு கோவையில் போட்டியிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு வழங்கி உள்ளார். அவரது ஆணைக்கிணங்க கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் உறுதியாக வெல்ல உழைக்க இருக்கிறோம்’ என்றார்.

அதைத்தொடர்ந்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறு வேன் என அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன் கூறியுள்ளாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘அவர்கள் தோற்று விடுவோம் என்றா சொல்லப் போகிறார்கள்?. எனக்கு கோவை வேறு, கரூர் வேறு இல்லை. கரூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் ஏற்கனவே வெற்றி பெற்று இருக்கிறேன். இப்போது கோவை தொகுதியை எனக்கு வழங்கி இருக்கிறார்கள்’, என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com