பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை கடத்திய பெண் கைது

குழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதால் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றார்.
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியை சேர்ந்த தேவி (வயது 30) கடந்த மாதம் 29-ந் தேதி பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவருக்கு சில நாட்களாக உதவி செய்தார்.

குழந்தையின் காலில் கொப்பளம் இருப்பதால் டாக்டரிடம் காண்பித்துவிட்டு வருவதாக கூறி நேற்று முன்தினம் குழந்தையை அந்த பெண் கொண்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த தேவி, இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து குழந்தையை கடத்தியது உடுமலை பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (36) என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com