சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி ரத்து செய்தார்: காஷ்மீர் மாநிலம் 2 ஆக பிரிப்பு

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதி நேற்று ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த மாநிலத்தை இரண்டாக பிரிக்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
Published on

புதுடெல்லி,

இந்தியாவின் வட கோடியில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள எழில் மிகுந்த மாநிலம் காஷ்மீர். இந்த மாநிலம் ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய 3 பகுதி களை கொண்டது.

நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பிறகு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்தது. ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தில் 370, 35ஏ ஆகிய பிரிவுகள் புதிதாக சேர்க்கப்பட்டன.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்பு அந்தஸ்தின் காரணமாக வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு சொத்து வாங்கவோ, தொழில் தொடங்கவோ முடியாது. காஷ்மீர் மாநில பெண்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆண்களை திருமணம் செய்தால் அவர்களுடைய சொத்துரிமை பறிபோய்விடும். ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு தவிர மற்ற துறைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது. அந்த மாநில சட்டசபையின் பதவி காலமும் 6 ஆண்டுகள் ஆகும். அந்த மாநிலத்துக்கென்று தனி அரசியல் சட்டமும், தனி கொடியும் உண்டு.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என்று பாரதீய ஜனதா வாக்குறுதி அளித்தது. தேர்தலில் அந்த கட்சி மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததை தொடர்ந்து, அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை களை மத்திய அரசு தொடங்கியது.

கடந்த வாரம் இந்த நடவடிக்கை தீவிரம் அடைந்தது. முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் 90 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். காஷ்மீர் சென்று இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் அமர்நாத் பக்தர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அரசு கேட்டுக்கொண்டது. கல்லூரி விடுதிகளில் தங்கி இருந்த மாணவ-மாணவிகளும் அங்கிருந்து வெளியேறி சொந்த ஊர்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

இதன் காரணமாகவும் காஷ்மீர் மாநிலத்தை பிரிக்கவும், அந்த மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யவும் மத்திய அரசு தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியானதால் அங்கு பதற்றநிலை உருவானது. இதனால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி காஷ்மீர் நிலவரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களின் ஒளிபரப்பு முடக்கப்பட்டது. முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

நேற்று நாடாளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடியின் வீட்டில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. மந்திரிசபையின் இந்த முடிவு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இதுபற்றிய அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது.

இந்த நிலையில், 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. மாநிலங்களவை கூடியதும் அதன் தலைவர் வெங்கையா நாயுடு, தனக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தின்படி, தேசிய முக்கியத்துவத்தை கருதி சபை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே நோட்டீஸ் வழங்காமல் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய அரசுக்கு அனுமதி வழங்குவதாக கூறினார்.

மற்ற மாநிலங்களைப் போல், காஷ்மீர் மாநிலத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவையும் அமித்ஷா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். அந்த மசோதாவும் நிறைவேறியது.

இதேபோல் மக்களவையிலும், காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்ய வகை செய்யும் மசோதாவையும், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவையும் தாக்கல் செய்வதற்கான தீர்மானத்தை அமித்ஷா கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், இது தொடர்பான மசோதாக்களை செவ்வாய்க்கிழமை (இன்று) தாக்கல் செய்வதாகவும், அவற்றின் மீதான உறுப்பினர்கள் விவாதத்துக்கு பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அப்போது கூறினார். உடனே ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேஜையை தட்டி வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com