புதுடெல்லி,
மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே முத்தலாக் தடை மசோதா நேற்று நிறைவேறியது. மசோதாவுக்கு ஆதரவாக 99 பேரும், எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.
உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வழிசெய்யும் மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. மாநிலங்களவையில் ஆளும் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை இல்லாதபோதிலும், இந்த மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தொடர்ந்து முத்தலாக் தடைச் சட்டம் அரசாணையும் வெளியிடப்பட்டது.