சீர்காழி,
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் பல்வேறு இடங்களில் அரசு அனுமதியோடு மணல் குவாரிகள் இயங்கி வந்தன. இந்தநிலையில் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக அதிக ஆழத்தில் மணல் எடுப்பதாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரணை செய்த கோர்ட்டு, சீர்காழி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகளை ரத்து செய்து உத்தர விட்டது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் தட்டுப்பாட்டால் பல்வேறு இடங்களில் இருந்து தரமில்லாத மணலை வாங்கி பயன்படுத்தும் அவலநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை சமூக விரோதிகள் பயன்படுத்தி கொண்டு சீர்காழி அருகே புங்கனூரை அடுத்த உப்பனாற்றில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக மணலை அள்ளி விற்பனை செய்து வருகின்றனர். உப்பனாற்றில் அள்ளும் மணலை விற்பனை செய்வதற்கு வசதியாக அந்த பகுதியில் ஆங்காங்கே குவித்து வைத்துள்ளனர். அதிக ஆழத்தில் மணல் அள்ளப்படுவதால் உப்பனாற்றில் பல்வேறு இடங்களில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் தற்போதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோல் சீர்காழி பகுதியில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக சவுடு மணலும் அள்ளப்படுகிறது. இதனால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உப்பனாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளுவதையும், சீர்காழி பகுதியில் சவுடு மண் எடுப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.