பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்பவே மதவாத அரசியல் செய்கிறார்கள் - கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பொருளாதார சரிவை திசை திருப்ப மதவாத அரசியல் செய்வதாக கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
Published on

சென்னை,

இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி கொடுத்து அமோக வெற்றிபெற்று மத்தியில் ஆட்சியில் அமர்ந்த நரேந்திரமோடி அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலமாக மக்களை மதரீதியாக பிளவு படுத்துகிற அரசியலை செய்து வருகிறார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதற்கு மாறாக படுபாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. மக்களிடையே வாங்கும் சக்தி இல்லை, முதலீடுகள் இல்லை, வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர்கள் வேலை இழப்பு என அனைத்து நிலைகளிலும் இந்திய பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது.

இதன்மூலம் எழுகிற கடுமையான விமர்சனங்களை திசை திருப்புவதற்காக மதவாத அரசியலை தீவிரப்படுத்தி, செயல்படுத்தி வருகிற மோடி-அமித்ஷா கூட்டணி ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடுகிற காலம் மிக தொலைவில் இல்லை. இதன் மூலம் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு உரிய பாடம் கற்பிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com