பிரதமரின் குடிமக்கள் நிவாரண நிதியம்: பொதுஅதிகார அமைப்பு இல்லை; ஐகோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பிரதமரின் குடிமக்கள் நிவாரண நிதியம் என்பது பொதுஅதிகார அமைப்பு இல்லை என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
Published on

புதுடெல்லி,

டெல்லியை சேர்ந்த சம்யக் கங்வால் என்பவர் கடந்த மே 1-ந் தேதி பிரதமரின் குடிமக்கள் நிவாரணம் (பி.எம்.கேர்ஸ் நிதி) தொடர்பான அறக்கட்டளையின் பதிவு ஆவணம், இந்த நிதியம் உருவாக்க வெளியிட்ட அரசாணையின் நகல் மற்றும் இதற்காக முடிவெடுக்கப்பட்ட கோப்புக்களில் உள்ள குறிப்புக்களின் நகல்களை பிரதமர் அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரினார்.

இதற்கு கடந்த 2-ந் தேதி பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோருவதற்கு பி.எம்.கேர்ஸ் நிதியம் பொதுஅதிகார அமைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்டது அல்ல என்பதால், அவர் கோரும் ஆவணங்களை வழங்க முடியாது என்று கூறப்பட்டது.

இதற்கு எதிராக அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கை நேற்று நீதிபதி நவீன் சாவ்லா காணொலி மூலம் விசாரித்தார். அப்போது பிரதமர் அலுவலகம் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பி.எம்.கேர்ஸ் நிதியம் பொது அதிகார அமைப்பு என்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், இதனை நிரூபிக்கும் வகையில் தங்கள் வாதங்களை முன்வைக்கவும் ஆவணங்களை தாக்கல் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு மாதம் 28-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com