மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியீடு; ஆந்திர பேராசிரியர் கைது

ஆராய்ச்சி வழிகாட்டியாக செயல்பட மறுப்பு தெரிவித்ததால் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆந்திர பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
Published on

மங்களூரு: ஆராய்ச்சி வழிகாட்டியாக செயல்பட மறுப்பு தெரிவித்ததால் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆந்திர பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.

ஆராய்ச்சி படிப்பு

கர்நாடக மாநிலம் மங்களூரு பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி ஆராய்ச்சி படிப்பு(பி.எச்.டி) படித்து வந்தார். அவர் தனது படிப்புக்கு வழிகாட்டும் நெறியாளராக ஆந்திர மாநிலத்தின் ஆச்சாரியா நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள சுதீர்குமார் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.

அவரது வழிகாட்டுதலின்பேரில் படிப்பை தொடர்வதற்காக மங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கையை அந்த மாணவி சமர்ப்பித்தார். ஆனால், சம்பந்தப்பட்ட பேராசிரியர் அதற்கான தகுதி பெற்றவர் அல்ல என்று கூறி அனுமதி வழங்க மங்களூரு பல்கலைக்கழகம் மறுத்து விட்டது.

பேராசிரியர் ஆத்திரம்

அதை சுதீர்குமாரிடம் தெரிவித்த அந்த மாணவி தனது படிப்பை தொடர வேறு பேராசிரியரை வழிகாட்டி நெறியாளராக ஏற்க முயற்சி செய்துள்ளார். இதனால் சுதீர்குமாருடனான தொடர்புகளை அந்த மாணவி துண்டித்ததாக தெரிகிறது.

அதை அறிந்த சுதீர்குமார் மாணவியை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். அந்த முயற்சி பலன் அளிக்காமல் போன நிலையில், மாணவியின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

சைபர் கிரைம்

அதன்பின்னரும், அந்த மாணவி சுதீர்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. அதனால் ஆத்திரமடைந்த சுதீர்குமார் மாணவியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டார். அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சம்பவம் குறித்து மங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மங்களூரு சைபர் கிரைம் போலீசார் சுதீர்குமாரை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com